வடக்கு, கிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்களின் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட அரசமைப்பு 44 வருடங்களில் 22வது தடவையாக திருத்தமாக நாடாளுமன்றத்திலே நிறைவேறியிருக்கின்றது என்று தெரிவித்த அவர், பெப்ரவரி இறுதியுடன் கலையவிருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை அரசு பிற்போடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மாகாணசபைகள் இருந்த காலத்திலே நாங்கள் எங்களது பிரதேசங்களை ஓரளவுக்குக் காப்பாற்ற முடிந்தது என்று தெரிவித்த அவர், இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் ஆளுநரின் ஆட்சியின் கீழ் உள்ளதால் அரசாங்கம் தன் இஷ்டப்படி செயற்படுகின்றதும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் உண்மையான இன ஐக்கியம், அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் மாகாணசபைத் தேர்தல்கள் உடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒன்பது மாகாண சபைகளுக்குமாக மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post