எவரும் அனுமதி இன்றிப் பேசுவதற்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் வசதியாக சிங்கப்பூரிலும் “ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்” (Speakers’ Corner) என்று ஒர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று அந்த இடத்தில் கூடிய சிலர் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு நாட்டுக்குள் தங்க இடமளித்திருப்பதற்குத் தங்கள் எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரில் சென்று இறங்கியது முதல் அங்கு அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையோ ஒன்று கூடல்களையோ நடத்துவதற்கு அந்நாட்டுப் பொலிஸார் அங்குள்ள சட்டங்களின் கீழ் தடைவிதித்திருக்கின்றனர்.
இதனால் அவருக்கு எதிரான குரல்கள் அங்கு தடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியிலேயே ஸ்பீக்கேர்ஸ் கோர்ணர்” (Speakers’ Corner) இடத்தில் ஓரிருவர் கூடி எதிர்ப்பு நிகழ்வை நடத்தியுள்ளனர்.
2020 தேர்தலில் மக்கள் குரல் என்ற கட்சி சார்பில் வேட்பாளராக நின்றபிரபு ராமச்சந்திரன் (34) என்பவர் அந்த எதிர்ப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் என்று சிங்கப்பூரின் ஆங்கில செய்திப் பத்திரிகையான த ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ் (The Straits Times) தகவல் வெளியிட்டுள்ளது.
அங்கு உரையாற்றிய அவர், “கோட்டாபய விவகாரம் குறித்து சிங்கப்பூரில் பேசுவது மிகக் கடினமான விடயம். ஆனாலும் நாங்கள் அது பற்றி சர்வதேச சமூகத்துக்கு உரத்த குரலில் தெரிவிக்கவேண்டிய அவசியம் உள்ளது. கோட்டாபய ராஜபக்ச இங்கேதான் இருக்கிறார் என்பதை உலகத்துக்குக் கூறவேண்டியிருக்கிறது.
அவர் விரும்பத் தகாதவர். அரசியல்ரீதியாகத் தன்னை வெளிப்படுத்திய ஒருவர். கடவுச்சீட்டு வைத்திருக்கின்ற ஏனைய இலங்கையர்களைப் போன்று அவரையும் கருதிவிட முடியாது. எதற்காக நாங்கள் அவரைநாட்டுக்குள்ளே எடுத்திருக்கிறோம்? என்று பிரபு ராமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரோடு மக்கள் குரல் கட்சியின் மற்றொரு வேட்பாளராகிய Leong Sze Hian, (68) என்பவரும் எதிர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அவர்கள் இருவரும் கோட்டாபய விவகாரம் மீது கவனத்தை ஈர்ப்பதற்கு சமூக ஊடகங்கள் மூலமாகவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
பெரும் நிதி நெருக்கடியில் நாட்டைச் சிக்க வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிய ஒருவர் எதற்காகத் தான் பதவி விலகிய பின் மறைந்து வாழ சிங்கப்பூரைத் தெரிவு செய்தார்? எனவே இங்குள்ள அவரது சொத்துக்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, சிங்கப்பூரின் செயல் அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாகக் தனது பெயரை வெளியிட விரும்பாத தென்னாசியப்பின்னணி கொண்ட சிங்கப்பூர் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் உள்ள இலங்கையர்கள் எவருமே அவர்கள் தமிழராக இருந்தாலும் சிங்களவராக இருந்தாலும் சரி கோட்டாபய தம் அருகில் இருப்பதை வெறுக்கவே செய்வர் என்று அந்த சட்டத்தரணி ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ்பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் சட்டங்களின் படி சிங்கப்பூர் பிரஜைகள், வதிவிட அனுமதி பெற்றவர்கள்(residents,) தொழில் வீஸா வைத்திருப்போர் (work pass holders) மற்றும் சாதாரண சமூக வீஸாவில் (social visitors) வருகை தந்து தங்கியிருப்போர் என்று எவருமே கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகஎதிரப்பைத் தெரிவிக்க முடியாது. அதனை அந்நாட்டுப் பொலீஸார் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
“ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ்” இலங்கை விவகாரங்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்கள், இலங்கைப் பின்னணி கொண்ட சிங்கப்பூர் பிரஜைகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள் சுமார் இருபது பேரைத் தொடர்பு கொண்டு கோட்டாபய விவகாரம் தொடர்பாகக் கருத்தறிய முற்பட்டது என்றும் ஆனால் அவர்கள் எவருமே கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றும் அதன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post