சர்வதேச நாணயநிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய வரிக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனால் தொழில்சார் நிபுணர்கள் புலம்பெயர்வது அதிகரித்துள்ளது. இதனால் சுகாதார துறையும் ஏனைய துறைகளும் மோசமாக பாதிக்கப்படலாம்.
இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளதாவது-
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த வரிக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதில் மறைப்பதற்கு எதுவுமில்லை. அது தெளிவான விடயம். இல்லாவிட்டால் அரசாங்கம் பெறும் தவறை செய்யுமா?
இந்தத் தீர்மானங்கள் காரணமாக எவ்வாறான ஆர்ப்பாட்டங்களை சந்திக்க நேரும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும். வரிகொள்கைகளை ஆராய்ந்தவர்கள் சர்வதேச நாணயநிதியத்தின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளனர். இந்த வரிக் கொள்கைகள் காரணமாக நாடு கற்காலத்துக்கே செல்கின்றது.
மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் தென்பகுதியில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றது. பல மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
இதனால் பல மருத்துவமனைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. தொழில்சார் நிபுணர்களின் குடும்பங்களுக்கு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதே சிறந்த முடிவாக உள்ளது.- என்றார்.
Discussion about this post