8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது டலஸ் அழகப்பெருமவின் பெயரை வழிமொழிந்து அவருக்கு நேசக்கரம் நீட்டிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிடமிருந்து வெளிவிவகார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் புதிய வெளிவிவகார அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோட்டாவின் ஆட்சியில் பீரிஸே வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், ஜனாதிபதி தெரிவின்போது பீரிஸ், டலஸ் அழகப்பெருமவுக்கு சார்பாகச் செயற்பட்டார். இதனால் மொட்டு கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய அரசில், பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இலங்கையின் பிரதம அமைச்சராக தினேஷ் குணவர்தன இன்று முற்பகல் பதவிப்பிரமாணம் செய்தார். அதன்பின்னர் பிற்பகலில் புதிய அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிய அமைச்சரவை விவரம் வருமாறு,
- தினேஷ் குணவர்ன – பிரதமர்,பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
- விஜயதாச ராஜபக்ச – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகார அமைச்சர்.
- டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்.
- சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்.
- பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்.
6.கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்.
7.மஹிந்த அமரவீர – விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர். - ஹரின் பெர்ணான்டோ – சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர்.
- ரமேஷ் பத்திரண – கைத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்.
- பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர்.
- அலிசப்ரி – வெளிவிவகார அமைச்சர்.
- விதுர விக்கிரமநாயக்க – மத விவகாரம் அமைச்சர்.
- காஞ்சன விஜேசேகர – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்.
- நஷீர் அஹமட் – சுற்றாடல்துறை அமைச்சர்.
- ரொஷான் ரணதுங்க – விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர்.
- டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்.
- நளின் பெர்ணான்டோ – வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்.
- மனுச நாணயக்கார – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்.
நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. விமான விவகாரம் தொடர்பான விசாரணை முடியும்வரை அவரை அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார்.
ஏற்கனவே மேற்படி விடயமானங்களை வகித்தவர்களுக்கு அதே அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பெண்கள் எவரும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்படவில்லை. அடுத்து வரும் நாட்களிலும் அமைச்சர்கள் சிலர் பதவியேற்கவுள்ளனர். இதன்போது பெண் பிரதிநிதித்துவத்துக்கு இடமளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, அமைச்சரவையில் ஒரு ராஜபக்சகூட இல்லை. மக்கள் எதிர்ப்பால் அவர்களுக்கான கதவடைப்பு தொடர்கின்றது.
பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சு ஜனாதிபதி வசம் இருக்கும். அடுத்த அமைச்சரவை நியமனத்தின்போது புதிய நிதி அமைச்சர் நியமிக்கப்படலாம்.
Discussion about this post