அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்துக்கு எதிராகக் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்காண மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதேநேரம், காலிமுகத் திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகப் பகுதிக்குள் பிரவேசிக்கும் சில வீதிகள் இரும்புக் கம்பிகள் கொண்டு பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு வழங்கக் கோரி காலி முகத் திடலில் நடத்தப்படும் தொடர் போராட்டம் இன்று 16ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
ஆயினும் காலி முகத் திடலுக்குச் செல்லும் வீதிகள் மூடப்பட்டுள்ளதால், காலிமுகத் திடலுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

காலி முகத் திடல் நோக்கிச் செல்ல முயன்ற மாணவர்களைப் பொலிஸாரும், இராணுத்தினரும் தடுத்ததால் அங்கு பதற்ற நிலைமை காணப்பட்டது. நீதிமன்ற தடை உத்தரவு என்று கூறி, ஆவணம் ஒன்றைப் பொலிஸார் மாணவர்களுக்குக் கையளித்துள்ளனர். ஆயினும் மாணவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post