Friday, May 30, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

சனம் பெருகும் பூமியில் திருகப்படும் ஓர் இனம்

July 11, 2022
in ஆய்வு கட்டுரைகள்
சனம் பெருகும் பூமியில் திருகப்படும் ஓர் இனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தீபச்செல்வன்

இந்தப் பூமி அனைத்து மனிதர்களுக்கும் சமமானது. அவரவர் பிறந்த நிலங்களில் தத்தம் உரிமைகளை அனைத்து மக்கள் பிரஜைகளும் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப் பூமி சொந்தமானது என்பதே முழு உண்மை. உயிர்க்கோள கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கையில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றோடு ஒன்று தங்கியுள்ளது. ஒன்றைக் கொன்று இன்னொரு வாழும் யுக்தியோ கோட்பாடோ இப் பூமிக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்தும். அதைப்போன்றே சமூகங்களும் இனங்களும் வர்க்கங்களும்கூட ஒரு ஒழுங்கில் ஒன்றை ஒன்று தங்கி வளையமாகிறது.

உலக மக்கள் தொகை பற்றிய பார்வை இந்த உலகிற்கு பொதுவான ஒரு பிரச்சினை என்ற போதும் ஈழத்துடன் ஒப்பிடுகின்ற போது நாம் உலக மக்கள் தொகை குறித்தும் குடித்தொகை குறித்தும் வேறு கதைகளையும் வேறு துயரங்களையும் கொண்டிருக்கிறோம். ஜூலை 11 உலக மக்கள் தொகை நாளாகும். உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1987இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளைப் பிரகடனம் செய்திருந்தது. அன்றைக்கு ஐந்து பில்லியன் உலக மக்கள் தொகை காணப்பட்டனர். தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடியைத் தாண்டுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

கிபி 1650 ஆம் ஆண்டிற்கு பின்னரே உலக மக்கள்தொகை வளர்ச்சியானது விரைவாக அதிகரிக்க துவங்கியது. 1840 இல் 100 கோடி மக்கள் தொகையாகவும், 1927 இல் 200 கோடி மக்கள் தொகையாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. இருப்பினும், 1960 இல் 300 கோடி மக்கள் தொகையை 33 ஆண்டுகளிலேயே எட்டியது. 1999ஆம் ஆண்டில் 600 கோடி மக்கள் தொகையினை அடைந்ததாக குடித்தொகை மதிப்பீட்டு பணியகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 2030ஆம் ஆண்டளவில் 8.6 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகின்றது. உலகின் மக்கள் தொகை மிகுந்த நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை முறையே 140 கோடி மற்றும் 130 கோடியாகும். இவை முறையே உலக மக்கள் தொகையின் 19% மற்றும் 18% ஆகும். இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024இல் இந்தியா சீனாவை மிஞ்சும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உலகில் ஏற்படக்கூடிய பல்வேறு பாதமான விளைவுகளுக்கு உலக மக்களின் பெருக்கம் மிகப் பிரதான காரணமாக சொல்லப்படுகின்றது. உணவு, நீர், சூழல் மாசடைதல், சமூகச் சீர்கேடுகள், பாலியல் சார் பிரச்சினைகள், கல்வி, சுகாதாரப் பிரச்சனைகள், உளநிலைப் பாதிப்புக்கள் வேலையின்மை, போக்குவரத்து நெரிசல், நிலப்பற்றாக்குறை, நிலைத்து நிற்கும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நாடான்றின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் மக்கள் தொகை பெருக்கம் அடிப்படைக் காரணியாக அமைகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தை அரசியலாகவும் அதிகார மையமாகவும் கொள்ளுகின்ற பிற்போக்குத் தனங்களாலும் நாடுகளில் பிரச்சினை மிகுகின்றன.

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுருவான டி. ஆர். மால்தஸ், என்பவர் தனது ‘மால்தஸ்சின் மக்கள் தொகைக் கோட்பாட்டில்’ அதிகரிக்கின்ற மக்கள் பெருக்கத்தினால் மக்கள் உணவின்றி அவதியுறுவர் என்று எச்சரித்தமை பிற்காலத்தில் நிகழ்ந்தேறியிருந்தது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த நிலையைப் பார்க்க முடிகிறது. பொதுமக்களிடத்தில் குடும்ப நலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், பாதுகாப்பான கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த நாள் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக எமது அண்டை நாடான இந்தியாவில் மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு குறித்த நிகழ்ச்சித் திட்டங்களை ஊடகங்களின் வழி ஈழ தேச மக்களும் கவனித்து அவை பற்றிய அறிவைக் கொண்டுள்ளனர்.

அண்மையில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்களை சேர்க்கும் பணி வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அதிர்ச்சிகரமான ஒரு விடயத்தை அறியவும் நேரிட்டது. தரம் ஒன்றுக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவாக காணப்பட்டது. அத்துடன் கடந்த ஆண்டுகளைப் பொதுவாக எடுத்து ஒப்பிடுகின்ற போதும் தரம் ஒன்றில் சேர்கின்ற பிள்ளைகளின் எண்ணிக்கை வடக்கு கிழக்கில் வீழ்ச்சி பெற்று வருகின்றமையை அவதானிக்க முடிந்தது. ஈழத்தில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படுகிறதா? அல்லது ஈழத்தில் திட்டமிட்ட வகையில் இனம் ஒடுக்கப்படுறதா? என்ற அடிப்படையில் தான் இந்த வீழ்ச்சியையும் துயரத்தையும் ஆராய ஆவேண்டும்.

ஈழத்தில் சிங்கள அரசின் இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக – இன அழிப்புக்கு எதிராக பெரும் போராட்டத்தை ஈழத் தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். இனவழிப்புக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்கவும் இனத்தை அழிப்பதையே சிங்கள அரசு வழிமுறையாக கொண்டது. இலங்கைத் தீவில் சிறுபான்மை இனமான ஈழத் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இப் போரில் இனம் அழிக்கப்பட்டார்கள். போரால் இன்றுவரையில் பல லட்சம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா போன்ற நாடுகளில் குடும்பக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் 53 சதவீதமான பெண்கள் குடும்ப காட்டுப்பாட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீலங்கா அரசு வடக்கு கிழக்கில் மாத்திரம் பலவந்தமான குடும்பக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்த முயன்று மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. ஈழ மக்கள் இனம் பெருக்கமடைவதை தடுத்து இனத்தை ஒடுக்கி அழித்து இல்லாமல் செய்யவே ஐ.நாவின் குடும்ப கட்டுப்பாட்டு சிந்தனையை ஈழத்தில் ஸ்ரீலங்கா அரசு நடைமுறைப்படுத்த முயல்கின்றது.

உலகம், மக்கள் தொகை பெருக்கம் பற்றி கவலை கொள்கின்றது. இந்தியா போன்ற நாடுகள் சனத் தொகைப் பெருக்கம் பற்றிக் கவலை கொள்ளுகின்றன. ஆனால் ஈழத்தில் நாமோ நம் இனம் அழிக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் குறித்து கவலை கொள்ளுகிறோம். இங்கே குடும்பக் கட்டுப்பாட்டுச் சிந்தனையும் கூட ஈழ மக்களுக்கு எதிராகவும் இனவழிப்பு கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை இந் நாளின் செய்தியாக சொல்கிறோம். இலங்கையில் சனத் தொகை வளர்ச்சி விகிதத்தில் மூன்றாம் நிலையில் தமிழ் சமூகம் இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் மிக மிக சிறுபான்மை இனமாக ஈழத் தமிழ் இனம் மாறுவதுடன் எதிர்காலத்தில் ஈழ மண்ணில் இருந்து ஈழத் தமிழ் இனம் முற்றாக இல்லாமல் போகின்ற நிலைகூட வரலாம். நமக்கு இனத்தின் விடுதலையுடன் இனத்தின் விருத்தி பற்றிய அறிவும் விழிப்புணர்வும்கூட இன்றைக்குத் தேவைப்படுகிறது.

Previous Post

கொழும்பில் மீண்டும் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு அவசர உத்தரவு!!

Next Post

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

Next Post
ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

ஜனாதிபதி மாளிகையில் கண்டெடுத்த பணம் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.