தமிழ் மக்களுக்கு புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள், தற்போது
சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலை தக்கவைத்துக்
கொள்ள முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா, உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருகும் பொருளாதாரத்தை
உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள்
அமைந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், கடலட்டை போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு – கிழக்கு
உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000
நேரடி வேலை வாய்ப்புகளையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட
அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்வதையும் இலக்காக கொண்டு செயற்பட்டு
வருவதாகவும்,கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார்.
“சாதிக்க துணிந்தவனுக்கு சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க
மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும்.
கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள்
மீது மிளகாய் அரைத்தவர்கள் எதை சாதித்தார்கள்? அடிக்கல் நாட்ட வந்த
ஆட்சியாளர்களை கண்டவுடன் குனிந்து கும்பிட்டு பல்லிளித்து மட்டும்
நின்றார்கள்.
“ஒவ்வொரு வரவு – செலவுத் திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும்,
பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி
அடங்கிக்கிடந்தார்கள். இந்த விறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி
புலிநொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக
ஒப்புக்கொண்டார்கள். அவ்வாறான ஓர் அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது
மக்களை ஏமாற்றப் போவதில்லை.என்று அவர் கூறினார்.
Discussion about this post